லஞ்சம் வாங்கிய 5 போலீசார் சஸ்பெண்ட்
தாம்பரம், லஞ்சம் வாங்கிய ஐந்து போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷபுரம் சோதனைச்சாவடி அருகே, செப்., 20ம் தேதி, போக்குவரத்து காவல் துறை எஸ்.ஐ., வெங்டேசன், போலீசார் ஜலேந்திரன் மற்றும் கதிரேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டுநரிடம், போலீஸ்காரர் கதிரேசன், அபராதத்தை தவிர்க்க, தன் பைக்கில் 500 ரூபாய் வைக்குமாறு கூறினார். அதேபோல், செப்., 23ம் தேதி, மேடவாக்கம் கடை வீதியில் 'பீட்' போலீஸ்காரர்களான திருமுருகன், வெங்கடேசன் ஆகியோர், தெரு வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக, தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு புகார் சென்றது. விசாரித்த கமிஷனர் அபின் தினேஷ் மோதக், லஞ்சம் வாங்கிய வெங்கடேசன், ஜலேந்திரன், கதிரேசன், திருமுருகன், வெங்கடேசன் ஆகிய ஐந்து பேரையும், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.