சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை, அடையாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் வினோத்குமார், 39. இவர், 2020ல், அடையாறு பகுதியில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய, 17 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, அடையாறு அனைத்து மகளிர் போலீசார், வினோத்குமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'வினோத்குமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, 7,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவர் உத்தரவிட்டார்.