மாநகராட்சி கூட்டத்திற்கு ரூ.62.57 கோடியில் அரங்கம் * 300 கவுன்சிலர்கள் அமர வசதி
சென்னை, சென்னை மாநகராட்சி கூட்டத்திற்காக, ரிப்பன் மாளிகை வளாகத்தில், 300 கவுன்சிலர்கள் அமரக்கூடிய வகையில், 62.57 கோடி ரூபாயில், புதிய அரங்கம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகளில், ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். அதனால், சென்னையின் வார்டுகளை 300 ஆக அதிகரிக்கவும், 15 மண்டலங்களை, 25 ஆக அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில், மண்டலங்கள் அதிகரிப்புக்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், கவுன்சிலர்கள் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், ரிப்பன் மாளிகை இரண்டாம் தளத்தில் உள்ள மன்றக்கூட்ட அரங்கம், இடநெருக்கடியுடன் உள்ளது. இதனால், கவுன்சிலர்கள் முதல் அதிகாரிகள் வரை பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கு தீர்வு காணும் வகையில், 62.57 கோடி ரூபாயில், பிரத்யேக மன்ற கூட்ட அரங்க கட்டடம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டு, 'டெண்டர்' கோரியுள்ளது. புதிய கவுன்சில் கூட்ட அரங்கம், மூன்று மாடி கட்டடமாக அமைய உள்ளது. இதில், ஆலோசனை கூட்டம், கவுன்சில் கூட்டம், மேயர், துணை மேயர் அலுவலகம், பொதுமக்கள் காத்திருப்பு இடம், பத்திரிக்கையாளர் மாடம், பொதுமக்கள் மாடம், உணவு அருந்தும் இடம் ஆகியவை அமைய உள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் வார்டுகள் வருங்காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்காக தான், 300 கவுன்சிலர்கள் அமரும் வகையிலான அரங்கமாக அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம், இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.