அடையாறு புரோக்கன் பிரிட்ஜ் பகுதியை மேம்படுத்த ஒப்பந்தம்
சென்னை; அடையாறில் உள்ள 'புரோக்கன் பிரிட்ஜ்' பகுதி உட்பட மூன்று இடங்களை மேம்படுத்தி, அழகுபடுத்தும் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்துக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக் முன்னிலையில், திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஒப்பந்தம், சென்னையின் நகர மேம்பாட்டுக்கான அழகுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை முன்னெடுப்பதில், ஒரு முக்கிய மைல்கல். அதாவது, 14,120 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க, புரோக்கன் பிரிட்ஜ் பகுதியை மக்கள் பயன் படுத்தும் வகையில் மேம் படுத்துவதே நோக்கம். இந்திரா நகர் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள மேம்பால ரயில் போக்குவரத்து பாதைக்குக் கீழே, 6,176 சதுர மீட்டர் மற்றும் வேளச்சேரி ரயில் மேம்பாலத்தின் கீழே, 9,270 சதுர மீட்டர் பகுதியை புதுப்பிப்பதற்கான திட்டங்களையும் வகுக்கிறது. இந்த இடங்கள், ஒளிரும் விளக்குகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு பல்துறை பொது இடமாக மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.