இரவில் பைக் ரேஸ்: சைதையில் அச்சம்
சென்னை:சென்னை, சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை வளாகத்தின் வழியே, கமர்சியல் வருமானவரி துறை அலுவலகத்திற்கு செல்லும் சாலையில், இரவு நேரத்தில் 'பைக்' ரேஸ் நடப்பதால் அவ்வழியே செல்ல அச்சமாக இருப்பதாக பாதசாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.சென்னை, சைதாப்பேட்டையில் ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட துறைகள் செயல்படுகின்றன. வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனைக்கும், அதன் முன்புறம் ஓடும் கால்வாய்க்கும் இடையில், 500 மீட்டருக்கும் மேல், நேராக செல்லும் 15 அடி அகல சாலை உள்ளது.அந்த சாலையில், இரவு நேரத்தில், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் 'பைக்' ரேஸ் நடத்துகின்றனர். பைக் வீலிங் செய்வதற்கு, அங்கு பயிற்சி மேற்கொள்கின்றனர். 'இப்பிரச்னையால், இரவு நேரத்தில் அப்பகுதி வழியாக செல்ல அச்சமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும்' என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, அப்பகுதியில் உள்ள செக்யூரிட்டியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், இரவு 10:00 மணிக்கு மேல் பைக்குகளில் ரேஸ் மற்றும் வீலிங் சாகசம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டனர். இது தொடர்பாக இப்பகுதியை சேர்ந்த சிலர் புகார் எழுப்பியதால், பைக்குகளை அப்பகுதி வழியாக விட மறுத்தோம். அப்பகுதியின் உள்ளே வருவதற்கு மற்றொரு வழி இருப்பதால், அந்த வழியில் உள்ளே வந்து விடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.