வாகனங்கள் ஆக்கிரமிப்பால் பஸ் பயணியருக்கு இடையூறு
அண்ணா நகர்,:அண்ணா நகர் மூன்றாவது அவென்யூவில், டவர் பூங்கா நுழைவாயில், ரவுண்டானா, கந்தசாமி கல்லுாரி, அண்ணா நகர் காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. இச்சாலையை ஆக்கிரமித்து அடாவடியாக ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவது அதிகரித்து வருகிறது.குறிப்பாக, மூன்றாவது அவென்யூ பேருந்து நிறுத்தம் முன், பயணியர் நிழற்குடையை மறைத்து, வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அந்நடைமுறை ரத்து செய்யப்பட்டதால், வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன.போக்குவரத்து காவல் அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆக்கிரமிப்பு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.