மாநில ஜூனியர் தடகள போட்டி சென்னை மாணவர்கள் புது சாதனை
சென்னை:மதுரையில் மாநில அளவில் நடந்து வரும் ஜூனியர் தடகளப் போட்டியில், சென்னையின் சுபதர்ஷினி மற்றும் யுவராஜ், புதிய சாதனையை படைத்து அசத்தி உள்ளனர். தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் மதுரை தடகள சங்கம் சார்பில், மாநில அளவில் 37ம் ஆண்டு ஜூனியர் ஓபன் தடகள போட்டி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், கடந்த 8ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், மாநிலம் முழுதும் இருந்து 4,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். இதன் 20 வயதுக்கு உட்பட்ட 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பெண்கள் பிரிவில் சென்னை, பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனை சுபதர்ஷினி, போட்டி துாரத்தை 11.94 விநாடியில் கடந்து, மாநில அளவில் புதிய சாதனை படைத்து, தங்கம் வென்றார். இதற்கு முன், 2019ல் நடந்த மாநிலப் போட்டியில் திருவள்ளூரின் சந்திரா தெரசா, போட்டி துாரத்தை 12.16 விநாடியில் கடந்ததாக இருந்தது. அதேபோல், நேற்று முன்தினம் நடந்த, ஆண்கள் 110 ஹர்டில்ஸ் பிரிவில் சென்னையின் யுவராஜ் போட்டி துாரத்தை 14.09 விநாடியில் கடந்து, புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன் சந்தோஷ், போட்டி துாரத்தை 14.24 விநாடியில் கடந்தே சாதனையாக இருந்தது. தற்போது, அவரே புது சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து, 18 வயதுக்கு உட்பட பெண்கள் பிரிவு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், சென்னையின் எட்வினா ஜேசன், போட்டி துாரத்தை 55.72 விநாடியில் கடந்து, புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் சுபா என்பவர், போட்டி துாரத்தை 56.84 விநாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.