உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சென்னை, ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. பல்லாவரம் அடுத்த மூவரசம்பேட்டையை சேர்ந்தவர் மருதாச்சலம். இவர், தனது நிலத்தில், பழைய கட்டடத்தை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, ஹரீஷ் பில்டர்ஸ் நிறுவனத்துடன், 2021ல் ஒப்பந்தம் செய்தார். இதன்படி, 12 மாதங்களில் கட்டுமான பணிகளை முடித்து வீட்டை ஒப்படைப்பதாக, கட்டுமான நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் வீட்டை கட்டும் பணிகள் முடிக்கப்படவில்லை. இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மருதாச்சலம் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம், பத்திரத்தில் உரிய மாற்றங்கள் செய்வதுடன், வீட்டை ஒப்படைப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், அந்த குறிப்பிட்ட கட்டுமான நிறுவனம், இந்த உத்தரவு அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, மருதாச்சலம் மீண்டும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார். ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த ஆணையம், கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவை, கட்டுமான நிறுவனம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். உரிமையாளர்களுக்கு அசல் ஆவணங்களை அக்., 31க்குள் அளிக்க வேண்டும். உரிமையாளர்களுக்கு உறுதி அளித்தபடி, கட்டடத்தில் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இந்த ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டியதற்காக, கட்டுமான நிறுவனத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை, அக்., 31க்குள் கட்டுமான நிறுவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

எவர்கிங்
அக் 05, 2025 02:51

சிவ்தாஸ்மீனா தாயி நாகப்பட்டினம் ஆட்சியாளராக இருந்தவர்......‌இதையும் சுனாமி கொண்டு போகாமல் இருந்தால் நல்லது


சமீபத்திய செய்தி