50 வீடுகளில் புகுந்த புழல் ஏரி உபரி நீர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணலி: புழல் ஏரி உபரி நீர் திறப்பால், பாலசுப்பிரமணியம் நகரில் 50 வீடுகளில் வெள்ளம் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையால், புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், படிப்படியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, வினாடிக்கு 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் கால்வாயானது, புழல், காவாங்கரை, வடகரை, மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல், எஸ்.ஆர்.எப்., பர்மா நகர் உயர் மட்ட பாலம், சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக, கொசஸ்தலை ஆறுடன் இணைந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே, புழல் உபரி கால்வாயை ஒட்டி, தாழ்வாக இருக்கும் பாலசுப்பிரமணியம் நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று அதிகாலை வெள்ளம் சூழ்ந்தது. அதன்படி, 50 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஆனாலும், முழங்கால் அளவிற்கே வெள்ளம் தேங்கியிருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து விட்டனர். தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், வெள்ளம் வடிய தேவையான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.