குரூப்-1 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச நேர்முக தேர்வு பயிற்சி
சென்னை: 'குரூப்-1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மாதிரி நேர்முகத் தேர்வு பயிற்சிக்கு, விண்ணப்பிக்கலாம்' என, மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள், கடந்த 30ம் தேதி வெளியானது. இதில், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லாத கல்வியகத்தில் பயிற்சி பெற்று, முதன்மை தேர்வு எழுதிய 636 பேரில், 37 மாணவர்கள், 24 மாணவியர் என, மொத்தம் 61 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் - 1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து, மாணவ - மாணவியருக்கும், ஓய்வு பெற்ற, தற்போது பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., குரூப்-1 அதிகாரிகள், பாட வல்லுநர்கள் கொண்டு அமைக்கப்பட்ட குழு வழியே, மாதிரி நேர்முகத் தேர்வு பயிற்சி நடத்தப்பட உள்ளது. மேலும், வல்லுநர்களின் தனிப்பட்ட ஆலோசனைகளும், தேர்வர்களின் தேவைக்கேற்ப வழங்கப்படும். நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு, கையேடு, மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா பயிற்சி மையத்தில் இலவசமாக வழங்கப்படும். நேர்முகத் தேர்வு பயிற்சியில் பங்கு பெற விரும்பு மாணவ - மாணவியர், 044 - 2435 8373, 2433 0095, 98404 39393, 84284 31107 ஆகிய எண்களுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.mntfreeias.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.