உயிர் காக்கும் நவீன ஆம்புலன்ஸ் சேவை: எம்.ஜி.எம்., ஹெல்த் கேரில் அறிமுகம்
சென்னை: சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை, அதிநவீன உயிர்காக்கும், 'மொபைல் எக்மோ யூனிட்' ஆம்புலன்ஸ் சேவையை நேற்று அறிமுகம் செய்தது. இந்த சேவையை, அண்ணா நகர் உதவி கமிஷனர் ரவி, எம்.எல்.ஏ., மோகன், அலர்ட் அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். துவக்க விழாவில், டாக்டர் சேனாதி நந்த கிஷோர் பேசியதாவது: இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் சிக்கலான சூழல் ஏற்படும்போது, சரியான நேரத்தில், 'எக்மோ' சிகிச்சை கிடைப்பது அவசியம். இந்த 'எக்மோ' சிகிச்சை வசதி, மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. அங்கு நோயாளிகள் சென்றடைவதில் தாமதம் ஏற்படலாம். தொலைதுாரத்தில் உள்ள நோயாளிகளுக்கு, போதுமான ஆக்சிஜன் அல்லது ரத்த ஓட்டம் இல்லாத ஒவ்வொரு நிமிடமும் உறுப்பு பாதிப்பு, மூளை பாதிப்பு அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உண்டு. புதிய ஆம்புலன்ஸ் சேவையால், உயிரிழப்பை தடுக்க முடியும். மேம்பட்ட இதய, நுரையீரல் சிகிச்சையை, நோயாளி இருக்கும் இடத்திலேயே வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குனர் பாலகிருஷ்ணன், இணை இயக்குனர் சுரேஷ் ராவ் உட்பட பலரும் பங்கேற்றனர்.