உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய மகளிர் கால்பந்து போட்டி சென்னை வீராங்கனையர் தகுதி

தேசிய மகளிர் கால்பந்து போட்டி சென்னை வீராங்கனையர் தகுதி

சென்னை, தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக மகளிர் அணியில், சென்னையைச் சேர்ந்த எட்டு வீராங்கனையர் இடம்பெற்றுள்ளனர். இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில், தேசிய அளவிலான 'மகளிர் சீனியர் ராஜமாதா ஜிஜாபாய் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்' போட்டி நடக்கிறது. இதில், தமிழகம் உட்பட 32 அணிகள், எட்டு மண்டலங்களாக பிரிந்து போட்டியிடுகின்றன. போட்டிகள், இரண்டு கட்டமாகவும், லீக் மற்றும் நாக் -அவுட் முறையிலும் நடக்கின்றன. முதல் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், அடுத்த லீக் போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம், நரைன்பூரில் வரும் அக்., 1 முதல் 15ம் தேதி வரை நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளில், தமிழகம், உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 10 அணிகள் இரண்டு பிரிவாக மோத உள்ளன. 'ஏ' பிரிவில், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், கோவா அணிகளுடன் தமிழகம் இடம் பெற்றுள்ளது. இதற்காக, திண்டுக்கல்லில் நடந்த பயிற்சி முகாமில் தயாரான தமிழக அணி வீராங்கனையர், இன்று சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புறப்படுகின்றனர். இதில், சென்னையைச் சேர்ந்த லயா, தரணிகா, சண்முகப்ரியா, சந்தியா, கவிரதனா, மதுமதி, சவுமியா, மோனிஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக அணி, தனது முதல் போட்டியில், அக்., 1ம் தேதி சத்தீஸ்கர் அணியை எதிர்த்து மோதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை