எம்.எம்.டி.ஏ., சாலை முழுதும் ஆக்கிரமிப்பு: அகற்றாமல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
அரும்பாக்கம்: அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலை முழுதும், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால், பாதசாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது. எம்.எம்.டி.ஏ., காலனி - 100 அடி சாலையை இணைக்கு இந்த பிரதான சாலையில், இருபுறங்களிலும் நடைபாதையே தெரியாத வகையில், மெக்கானிக் கடைகள், உணவகம், டீ கடைகளின் விளம்பர பலகைகள் ஆக்கிரமித்துள்ளன. அதேபோல், வாட்டர் டேங் - எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலையில் சந்தை என்ற பெயரில் நடைபாதை முழுதும், ஆக்கிரமிப்பு கடைகள் தான் உள்ளன. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் நடந்து செல்கின்றனர். இந்த சாலை முழுதும், 10 மீ., இடைவெளியில் 20 இடங்களில், 'நடைபாதை நடப்பதற்கே' என, இருபுறங்களும் வரிசையாக விளம்பர பலகைகள் வைத்தும், அத்துமீறல் நடந்து வருகிறது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: எம்.எம்.டி.ஏ., காலனியில் பல ஆண்டுகளாக நடைபாதை ஆக்கிரமிப்பு உள்ளது. மாநகராட்சி சார்பில், பல லட்சம் ரூாபாய் செலவில், நடைபாதையில் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டும் பயனில்லை. சாலையில் இருபுறங்களில் இயங்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் நடைபாதை முழுதும் ஆக்கிரமித்துள்ளன. இதை முழுமையாக தடுக்க வேண்டிய மாநகராட்சி, கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.