தி.நகர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை சேப்பாக்கத்திற்கு மாற்ற உத்தரவு
சென்னை, தி.நகரில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை சேப்பாக்கத்திற்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் நடிப்பு, பாடல், இயக்கம், தயாரிப்பு என பன்முக ஆற்றலை பெற்றவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். காந்திய வழியில் பற்றுக்கொண்டவர். கலைவாணர் என்று அழைக்கப்பட்ட இவர், 1957ம் ஆண்டு காலமானார்.தி.நகர் ஜி.என்.செட்டி தெரு, திருமலை பிள்ளை சாலை சந்திப்பில், 1969ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாதுரை, என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். கடந்த 2008ம் ஆண்டு சாலை சந்திப்பில், உயர்மட்ட பாலம் கட்டியபோது அவரது சிலை சந்திப்பின் ஓரத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டது.அந்த சிலையை, அங்கிருந்து அகற்றி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் வைக்க வேண்டும் என, அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, கலைவாணர் அரங்க வளாகத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை விரைவில் நிறுவுவதற்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***