உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் கவுரவிப்பு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு

சென்னை ஏர்போர்ட்டில் பயணியர் கவுரவிப்பு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு

சென்னை :சென்னை விமான நிலையத்தில், 'யாத்ரி சேவா திவாஸ்' எனும் பயணியரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில், பயணியரை கவுரவிக்கும் வகையில், 'யாத்ரி சேவா திவாஸ்' என்ற நிகழ்ச்சிகளை, இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில், பயணியரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த பயணியருக்கு, முனையங்களில் இந்திய பாரம்பரியம், தமிழக கலாசாரப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு, தேசபக்தியை ஊக்குவிக்கும் வகையில் வினாடி வினா, ஓவியம் வரைதல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விமானத்தில் வந்த பயணியர், அவர்களை அழைத்து செல்ல வந்த பார்வையாளர்கள், ஏர்போர்ட் கால்டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலருக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு வருகை முனையத்தில், இலவச மருத்துவ முகாம்களும் நடந்தன. மீனம்பாக்கத்தில் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிட நல பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, விமான போக்குவரத்து துறை பற்றிய விழிப்புணர்வை, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஏற்படுத்தினர். இதுகுறித்து, விமான பயணியர் கூறியதாவது: விமானத்தில் நீண்ட நேரம் பயணம் செய்து வந்ததில் சற்று களைப்பாக இருந்தது. சோதனைகள் முடித்து வெளியே வந்தவுடன், நம் பாரம்பரிய முறைப்படி வரவேற்பில் மகிழ்ச்சி அடைந்தோம். பயணியர் விஷயங்களில் இது போன்று நிகழ்ச்சிகளை ஏர்போர்ட் அதிகாரிகள் தொடர்ந்து நடத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை