பா.ம.க., பிரமுகர் கொலை வழக்கு குற்றவாளியை விசாரிக்க அனுமதி
சென்னை:பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 14வது நபருக்கு, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.,வுக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர். ஹிந்து மதத்தின் மீது பற்றுடைய அவர், திருபுவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடந்த மதமாற்றத்தை தட்டிக்கேட்டார். கடந்த 2019 பிப்., 5ல், மர்ம நபர்களால் ராமலிங்கம் கொடூரமாக கொல்லப்பட்டார். என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த கொலை வழக்கில் முகமது அசாருதீன் உட்பட 19 பேருக்கு எதிராக, வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 16 பேரை இதுவரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இதில், 14வது நபராக கைது செய்யப்பட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த இம்தாத்துல்லா, 35, என்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். விசாரித்த நீதிபதி மலர்விழி, இம்தாத்துல்லாவை ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க, நேற்று முன்தினம் அனுமதி வழங்கினார். வரும் 14ம் தேதி, மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். என்.ஐ.ஏ., அதிகாரிகள் இம்தாத்துல்லாவை பலத்த பாதுகாப்புடன், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.