பல்லாவரத்தில் குளத்தில் கட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
பல்லாவரம், பல்லாவரம் ரயில் நிலையத்தை ஒட்டி, பழமையான செட்டிக்குளம் உள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்த இக்குளம், நாளடைவில் ஆகாயத் தாமரை, கோரைப் புற்கள் படர்ந்து நாசமானது. இதனால் மர்ம நபர்கள், கட்டட கழிவுகள் கொட்டி ஆக்கிரமித்தனர். தற்போது, கட்டடம், கடைகள் என, ஆக்கிரமிப்பாக மாறிவிட்டது.ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, இக்குளத்தில் உள்ள, 64 ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்றனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு புறம்போக்கு என, தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம், ஜமீன் மானியம் கிராம நத்தம் எனவும், நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கடைகளை இடிக்கக்கூடாது எனவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சாலை மறியலும் நடத்தப்பட்டது.இதையடுத்து, மூன்று கடைகளின் முன்பகுதியை மட்டும் இடித்த அதிகாரிகள், வியாபாரிகளுக்கு அவகாசம் வழங்கி, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.