ரவீஸ்வரர் கோவில் உயர்த்தும் பணி நிறைவு
வியாசர்பாடி: வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் 3.5 கோடி ரூபாய் செலவில், தரை மட்டத்தில் இருந்து உயர்த்தும் பணி நிறைவு பெற்றது. பிப்., 22ம் தேதி கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமையான ரவீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அற நிலையத் துறை கீழ் உள்ள இக்கோவிலில் சூரிய கதிர் ராஜகோபுரம் வழியாக, நேரடியாக நந்தி மற்றும் மூலவர் சிவலிங்கத்தின் மீது விழும். தற்போது சில ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடக்கவில்லை. கோவில் தரைதளத்தில் இருந்து 5 அடிக்கு பள்ளத்தில் இருப்பதால் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழவில்லை என்பது தெரிந்தது. மேலும் கோவில் உள்ள பகுதி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாலும், பெருமழையின் போது கோவிலுக்குள் தண்ணீர் சென்று விடுகிறது. கோவிலை தரை மட்டத்திலிருந்து உயர்த்துவது, மூலவர், அம்மன் மகா மண்டபம், நந்தி கொடிமரம், சண்டிகேஸ்வரர் ராஜகோபுரம் ஆகியவற்றை 8.6 அடி உயரம் உயர்த்த, 3 கோடி ரூபாய் செலவில், 2024, ஜூலை, 27ல் பணி துவங்கியது. நவீன தொழில் நுட்பமான ஜாக்கி உதவியுடன் கோவிலை உயர்த்தும் பணி நடந்து வந்த நிலையில், பணி முடிவடைந்துள்ளது. இப்பணிகளை ராஜஸ்தானைச் சேர்ந்த மம்சந்த் ஹவுஸ் லிப்டிங் நிறுவனம் மற்றும் பூவலிங்கம் பேரருள் சிற்பக் கலைக்கூடம் கட்டுமான பணியினர் இணைந்து மேற்கொண்டனர். பிப்., 22ம் தேதி கும்பாபிேஷகம் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.