வேலுார் நருவீ மருத்துவமனையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை
சென்னை: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, 54 பெண்ணின் மூட்டு பிரச்னைக்கு, வேலுார் நருவீ மருத்துவமனை டாக்டர்கள், ரோபோட்டிக் வாயிலாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, 54 வயது பெண் நாள்பட்ட மூட்டு வலி பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு பிரிட்டனின் ஸ்மித் நெப்யு நிறுவன தயாரிப்பான, 'ரோபோட்டிக்' வாயிலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வழக்கமான அறுவை சிகிச்சையில், அதிக ரத்த போக்கு, திசு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். ஆனால், ரோபோட்டிக் சிகிச்சையில், இவை தவிர்க்கப்படுவதுடன், துல்லியமாகவும் செய்ய முடியும். நோயாளியும் இரண்டாவது நாளில் குணமடைந்து நடக்க துவங்கினார். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், மருத்துவமனை செயல் இயக்குநர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் அரவிந்தன் நாயர், எலும்பியல் துறை தலைமை டாக்டர் வெர்னன் லீ, தலைமை இயக்குதல் அலுவலர் சரவணவன் ராமன், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.