உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நடுநிலைப்பள்ளி மைதானத்தில் இயங்கும் தற்காலிக சுடுகாடு நிரந்தரமாகும் ஆபத்து

 நடுநிலைப்பள்ளி மைதானத்தில் இயங்கும் தற்காலிக சுடுகாடு நிரந்தரமாகும் ஆபத்து

சென்னை: மாதவரத்தில் பள்ளிக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தற்காலிகமாக செயல்பட்டு வந்த மயானம் ஏழு ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், சமூக விரோத செயல்களும் அதிகரித்துள்ளதாக, பள்ளி மாணவ - மாணவியர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அருகே பள்ளிக்கூடத்திற்கான மைதானத்தில், தற்காலிகமாக சுடுகாடு அமைக்கப்பட்டது. அவசரத்திற்காக முன்னாள் கவுன்சிலர் ஒருவரின் அனுமதியோடு, காலி மைதானம் தற்காலிக சுடுகாடாக மாற்றப்பட்டது. அதன்பின் தொடர்ந்து, அங்கு சடலங்கள் எரிக்கப்பட்டன. இந்நிலையில், தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கையும், 450க்கு மேல் உள்ளது. ஆனால், சுடுகாடு அங்கிருந்து அகற்றப்படாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு சடலங்களை எரிப்பதால் ஏற்படும் புகை, பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும், இறுதி ஊர்வலத்திற்கு வருவோர் மது அருந்தி பள்ளி வளாகத்திலேயே, மது பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. தற்காலிக சுடுகாடு அமைந்துள்ள இடம் குறித்து பகுதிமக்கள், கிராம நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டனர். பள்ளி அருகே உள்ள காலி இடமான தற்காலிக சுடுகாடு அமைந்துள்ள இடம், 292-1, 292-3 சர்வே எண்ணில் வருகிறது என்றும், அது, சுடுகாடு இருந்ததற்கான பதிவேட்டில் இல்லை என்றும், அந்த இடம் பள்ளிக்கான கூடுதல் இடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கன்னியம்மன் நகர் மக்கள் மற்றும் மாணவர்கள், நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். மனுவை பரிசீலித்த உதவி கலெக்டர், 'மாணவர்களை அழைத்து வந்து எதற்கு 'சீன்' போடுகிறீர்கள்' என, கேள்வி எழுப்பியதோடு, புகாருக்கு உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், புகார் மனு கொண்டு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இது குறித்து, புதிய கன்னியம்மன் நகர் மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதிக்கு சாலை, பள்ளி, சுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை; தற்காலிக சுடுகாடு உள்ள இடம் பள்ளிக்கான இடம். அங்கு, தொடர்ந்து உடல்கள் எரிக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். உடனடியாக சுடுகாட்டிற்கு தனி இடம் ஒதுக்கி, பள்ளிக்கான இடத்தை மீட்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை