ரூ. 1.88 கோடி மோசடி இருவர் கைது
ஆவடி, திருமுல்லைவாயில், ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் தணிகைவேல், 43 ; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர், ஆன்லைன் பங்கு சந்தை தொழில் செய்யும் போது, அம்பத்துார் பட்டம்மாள் தெருவை சேர்ந்த சிவசங்கர், 43 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சிவசங்கர், திருமுல்லைவாயில், சோழபுரத்தில் கே.பி. செந்துார் ஹோம்ஸ், விருட்சம் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட தொழில் செய்து வந்தார்.இருவரும், 10 ஆண்டுகளாக ஒன்றாக தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், 2021 - 22 ல், தன் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 5 சதவீதம் கமிஷன் தருவதாக, தணிகை வேலிடம், சிவசங்கர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி, தணிகைவேல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட ஐந்து பேர் இணைந்து, சிவசங்கர், அவரது மனைவி வித்யா உள்ளிட்டோரின் வங்கி கணக்கிற்கு 2.63 கோடி ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், சிவசங்கர் கூறியபடி கமிஷன் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, 74.55 லட்சம் ரூபாயை மட்டும் சிவசங்கர் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள 1.88 கோடி ரூபாயை திருப்பி தராமல், அடியாட்களை வைத்து, சிவசங்கர் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்து, கடந்த ஆண்டு இறுதியில் ஆவடி மத்திய குற்றப்பிரிவில், தணிகைவேல் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த சிவசங்கர், ஆவடி அண்ணனுாரைச் சேர்ந்த ராஜிவ்காந்தி, 40 ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.