தொழிற்சாலை ஊழியர் தற்கொலை உரிமையாளர் உட்பட இருவர் கைது
ஸ்ரீபெரும்புதுார், 'சாப்பிடக்கூட நேரம் தரவில்லை' என, கடிதம் எழுதி வைத்து தொழிற்சாலை ஊழியர் தற்கொலை செய்த சம்பவத்தில், தற்கொலைக்கு துாண்டியதாக, உரிமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த மதுராபேட்டையைச் சேர்ந்தவர் ரஞ்சித், 22. ஸ்ரீபெரும்புதுார், பட்டுநுால் சத்திரம் பகுதியில் வாடகைக்கு தங்கி, மாம்பாக்கத்தில் உள்ள கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில், உடன் தங்கியிருந்தவர்கள் ரஞ்சித்தின் அறையை திறந்து பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்தனர். இதில், ரஞ்சித் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், 'தன் தற்கொலைக்கு காரணம், தான் வேலை செய்யும் தொழிற்சாலை உரிமையாளர் அய்யப்பன் மற்றும் சூப்பர்வைசர் மாரியப்பன். சாப்பிட கூட நேரம் தராமல், தொடர்ந்து அதிக பணிச்சுமை தந்து தன்னை துன்புறுத்தியதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும்' எழுதப்பட்டிருந்தது.இதையறிந்த ரஞ்சித்தின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை அய்யப்பன் மற்றும் மாரியப்பனை கைது செய்யக்கோரி, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையம் எதிரே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து, அய்யப்பன் மற்றும் மாரியப்பனை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.