கடல் அலையில் சிக்கி இரு மாணவர்கள் மாயம்
எண்ணுார்:கடலில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் இருவர், அலையில் சிக்கி மாயமாகினர். மணலி, சி.பி.சி.எல்., நகரைச் சேர்ந்தவர் தருண்குமார், 17. இவர், மாதவரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். இவரது நண்பர் இம்மானுவேல், 16. இவர், மணலி அரசு மேல் நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்தார். பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால், தருண்குமார், இம்மானுவேல் உட்பட 16 பேர், நேற்று காலை, எண்ணுார், பாரதியார் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு, நண்பர்கள் கடலில் குளித்து விளையாடியுள்ளனர். அப்போது, அலையில் சிக்கி தருண்குமார் மற்றும் இம்மானுவேல் மாயமாகினர். சக நண்பர்கள், எண்ணுார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எண்ணுார், மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் மாயமான பள்ளி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை மாணவர்கள் கிடைக்கவில்லை. இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.