உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அலர்ஜியால் பெண் பலி கருணைகிழங்கு காரணமா?

அலர்ஜியால் பெண் பலி கருணைகிழங்கு காரணமா?

சென்னை, இரவில் உணவருந்திய பெண் திடீரென, 'அலர்ஜி' ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் கருணை கிழங்கு சாப்பிட்டதுதான் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, மேற்கு அண்ணா நகர், திருமங்கலம், 'ஏபி' பிளாக், முதலாவது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி, 35. இவர், கார் லோன் வாங்கி தரும் முகவர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவசுந்தரி, 33. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவ மனையில், கருவுறுதலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டில் தயிர் சாதம், கருணை கிழங்கு வறுவல் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென தேவசுந்தரிக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டு உடலில், 'அலர்ஜி' போல் ஆகி மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த சுடலைமணி, மனைவியை மீட்டு, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். பின், மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தேவசுந்தரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருமங்கலம் போலீசார், தேவசுந்தரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பெண்ணின் இறப்பிற்கு, இரவு உணவில் சாப்பிட்ட கருணை கிழங்கு காரணமா அல்லது கருவுறுதலுக்காக எடுத்த மருந்து காரணமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை