குமரன் குன்று கோவில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு
மேட்டுப்பாளையம் : குமரன் குன்று கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், அறங்காவலர் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில், குமரன் குன்றில் உள்ள கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், மிகவும் பழமையான கோவிலாகும். இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசால் அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் தலைவராக ஆர்.கே. செல்வக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சண்முகசுந்தரம், சரோஜினி வேணுகோபால், பழனிசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு பெற்றனர். ஹிந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் ஆய்வாளர் தமயந்தி, குமரன் குன்று கோவில் செயல் அலுவலர் சபரிஸ்வரி ஆகியோர் முன்னிலையில், அறங்காவலர் குழு தலைவராக செல்வக்குமாரும், அறங்காவலர்களும் பதவி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.