போக்கு காட்டும் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க தீவிரம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையத்தில் பல மாதங்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் சாலையில், கருப்பராயன் கோவில் அருகே கடந்த மாதம் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.அதே போல் கடந்த மார்ச் மாதம், அதே வெள்ளிப்பாளையம் பகுதி சென்னாமலை கரடு என்ற இடத்தில் கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது. வெள்ளிப்பாளையம் பகுதியில் பல மாதங்களாக, வனத்துறையினருக்கு சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.இதுகுறித்து, சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பாக வெள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை தினமும் வனத்துறையினர் கண்காணித்து, அதில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக படம் எதும் எடுக்கப்பட்டுள்ளதா என பார்க்கின்றனர். இதுவரை சிறுத்தை நடமாட்டம் குறித்து கேமராக்களில் எந்த படமும் பதிவாகவில்லை. பதிவாகும் பட்சத்தில் சிறுத்தையை விரைந்து பிடித்துவிடுவோம், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் என்றனர்.