உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.எச்.,ல் போதிய டாக்டர்கள் இல்லாததால்... எப்ப தான் தீர்வு? நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல்

ஜி.எச்.,ல் போதிய டாக்டர்கள் இல்லாததால்... எப்ப தான் தீர்வு? நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல்

வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனையில், போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வால்பாறையில், தேயிலை தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். வால்பாறை நகரில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், 9.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன முறையில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. மருத்துவமனையில் 64 படுக்கை வசதிகள் உள்ளன. நாள் தோறும், 300க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 64 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் எலும்பு, குழந்தைகள் நல மருத்துவர், கண், மயக்க மருத்துவர், இயற்கை மருத்துவர், பொதுமருத்துவர் என 12 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் தலைமை மருத்துவர் உட்பட நான்கு டாக்டர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இது தவிர நர்ஸ், உதவியாளர் உள்ளிட்ட 13 பணியிடங்களும், கடந்த பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. குறிப்பாக ஸ்கேன், ரத்த வங்கி உள்ளிட்ட எந்த ஒரு வசதிகளும் மருத்துவமனையில் இல்லை. இதனால் விபத்து காலங்களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், 64 கி.மீ., தொலைவில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் செல்லும் வழியில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இது குறித்து தமிழக வணிகர் சம்மேளத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம் கூறுகையில், ''வால்பாறை அரசு மருத்துவமனையை அனைத்து எஸ்டேட் தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக பிரேத பரிசோதனையில் உடற்கூராய்வு செய்ய நிரந்தரமாக ஊழியர் நியமிக்க வேண்டும்,'' என்றார். மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்ட போது, 'வால்பாறை அரசு மருத்துவமனையை பொறுத்தவரை, குறைவான டாக்டர்களே பணியில் இருந்தாலும், எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள டாக்டர்கள் டெபுடேஷன் அடிப்படையில் வேறு மருத்துவமனையில் பணி புரிந்தாலும், தேவையான நாட்களில் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். காலி பணியிடங்களை நிரப்ப உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர். சட்டசபையில் குரல் கொடுப்பேன் வால்பாறை எம்.எல்.ஏ., சுதாகரிடம் கேட்ட போது, ''தி.மு.க.,ஆட்சியில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்பது குறித்து சட்டசபையில், ஏற்கனவே கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளேன். மருத்துவமனையில் உபகரணங்கள் வாங்க இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும் ஆர்த்தோ டாக்டர், குழந்தைகள் நல மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிய பணியிடங்கள் விரைவில் நிரப்ப சட்டசபையில் குரல் கொடுப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை