| ADDED : ஏப் 30, 2024 11:54 PM
கோவை;கோவையில் வரும் ஐந்து நாட்கள் வெயிலின் தாக்கம் குறையாது எனினும், லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன்படி, பகல் நேரத்தில் அதிகபட்சம் 37-39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக இரவு நேரத்தில் 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேரம் 30-40 சதவீதமாகவும் இருக்கும். ஐந்து நாட்களில், 1 முதல் 7 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது. மண் ஈரத்தினை பொறுத்து, இறவை பயிர்களுக்கு நீர்பாசனம் செய்து பயிர் கழிவு மூடாக்கு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையினை பயன்படுத்தி, சரிவுக்கு குறுக்காக மண் புரட்டி போடும் கலப்பை கொண்டு, கோவை உழவினை மேற்கொள்ள வேண்டும். உயர்ந்து வரும் வெப்பநிலை, குறைந்து வரும் காற்றின் ஈரப்பதம் காரணமாக கால்நடைகளுக்கு வெப்ப அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், கால்நடை மற்றும் கோழிகளுக்கு போதுமான அளவு சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும்.வறண்ட வானிலையுடன் அதிக வெப்பம் காணப்படுவதால், கோழி மற்றும் மாடு கொட்டகைகளின் மேல் தண்ணீர் தெளிப்பதன் வாயிலாக, வெப்பத்தின் தாக்குதலை குறைக்கலாம்.