உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர் நோய் மேலாண்மையில் உயிர் எதிர் கொல்லிகள்! தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்

பயிர் நோய் மேலாண்மையில் உயிர் எதிர் கொல்லிகள்! தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்

ஆனைமலை, செப். 25-'தென்னையில் நோய் மேலாண்மையில் உயிர் எதிர் கொல்லிகள் பங்கு வகிக்கின்றன,'என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார். அவரது அறிக்கை வருமாறு: தென்னையில் நோய் மேலாண்மையில் உயிர் எதிர்கொல்லிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த உயிரியல் நோய் மேலாண்மையில் உயிருள்ள நுண்ணுயிர்களை கொண்டு நோய் காரணிகளை அழித்து, பயிர்களை பாதுகாப்பதாகும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை விட, இந்த உயிர் நுண்ணுயிர் எதிர்கொல்லியான, டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிவிஸ் பயன்படுத்தி, தென்னையில் குருத்தழுகல், அடித்தண்டழுகல், சாறுவடிதல், இலை கருகல், சாம்பல் இலைப்புள்ளி, வேர் வாடல்நோய் மற்றும் இலை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தலாம். டிரைக்கோ டெர்மா என்ற பூஞ்ஞான உயிர் எதிர்கொல்லியாக டிரைக்கோ டெர்மின், டிரைக்கோகாரிடின், செஸ்கூடெர்பினா, ெஹப்டாலின் அமிலம் மற்றும் டெர்மாடின் என்ற நோய் எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்து பயிர்களை பாதுகாக்கிறது. பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி செய்து மகசூலையும் அதிகரிக்கிறது.பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற பாக்டீரியா நோய் எதிர்ப்பு நொதிகளான, பெராக்ஸிடேங், பாலிபீனால் ஆக்ஸிமேஸ், பினைல், அலனின், அம்மோனியா லையேஸ், குளுக்கனேஸ், கைட்டினேஸ் போன்றவை பயிர்களில் அதிகளவில் நோய்களை கட்டுப்படுத்துகிறது. மேலும், இட்டுரின் சர்பாக்டின் மற்றும் சப்டிலின் என்ற நோய் எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்து நோய்களை கட்டுப்படுத்துகிறது. உயிர் எதிர்கொல்லிகள் விதையின் மேற்புரத்திலுள்ள நோய் கிருமிகளையும், மண் வழியாக பரவும் நோய் காரணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.இது பயிர்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு, கனிம பொருட்களின் உற்பத்தி மற்றும் மகசூல் அதிகரிப்புக்கும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த உயிர் எதிர்கொல்லி கலவையை மற்ற பூஞ்ஞான கொல்லி அல்லது பூச்சி கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது.100 கிலோ மக்கிய தொழு உரத்துடன், ஒரு கிலோ பேசில்லஸ் மற்றும் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி கலந்து, இரண்டு நாட்கள் இடைவெளியில், மறு கலப்பு முறையில் நிழலில் வைத்து தென்னங்கீற்றால் மூடிவிட வேண்டும். ஈரப்பதத்துடன், 25 நாட்கள் வைப்பதால், உயிர் எதிர்கொல்லிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனை மரத்துக்கு, 10 கிலோ என்ற அளவில், ஆறு மாதத்துக்கு ஒரு முறை இடலாம். தயாரித்த நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். மற்ற உயிர் உரங்களுடன் இக்கலவையை கலந்து இடலாம். மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறையை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை