வால்பாறை பஸ்களில் அலைமோதிய கூட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து, பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டியதால், பஸ் ஸ்டாண்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெளியூரைச் சேர்ந்த பலரும் தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்கள் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆர்வம் காட்டினர். இதனால், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அதேபோன்று, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல மக்கள் ஆர்வமாக வந்தனர். வால்பாறை பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. பஸ்சில் இடம் பிடிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். பஸ்சில் உள்ளவர்கள் இறங்குவதற்குள் பயணியர் ஏறியதால் நெரிசல் ஏற்பட்டது. பண்டிகை காலமாக உள்ளதால், வால்பாறை பஸ்சில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.