தினமலர் - பட்டம் மெகா வினாடி- வினா; பட் பட் என பதிலளித்த மாணவ, மாணவியர்
கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அசத்தினர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த, 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். நேற்று சித்தாபுதுார், பி.ஆர். சித்தா நாயுடு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி-வினா நிகழ்ச்சி நடந்தது.தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வில், 490 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த பிளஸ்1 வகுப்பு மாணவர் பென்னெட் வசீகரன், 9ம் வகுப்பு மாணவி ஹாசினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் போட்டிக்கொண்டு, ஆர்வமுடன் பதில் அளித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு,முதல்வர் காஞ்சனா மாலா பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் கிருஷ்ணஜெயந்தி, விஜி, விஜயா, ஜான்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.