அச்சப்பட வேண்டாம்!
வீட்டு உபயோக சிலிண்டர்கள் தாராளமாக கிடைக்கும் வரிசைப்படி நிச்சயமாக விநியோகிக்க நடவடிக்கை----நிருபர் குழு--: 'வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள் தாராளமாக கிடைக்கும். மக்கள் பதற்றப்பட வேண்டாம்' என, எல்.பி.ஜி., விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக, பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை வடக்கு பகுதியில், கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் உட்பட பகுதிகளில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களை சார்ந்த எல்.பி.ஜி., சிலிண்டர் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இவர்களிடம், சிலிண்டர் கோரி பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று நாட்களில், நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகஸ்தர்கள் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில், வீட்டு சமையலுக்கான காஸ் சிலிண்டர்கள் போதியளவு இருப்பில் உள்ளன. பொதுமக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. முன்பு, 21 நாட்களுக்கு பின், காஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது அது, 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விநியோகஸ்தரும் நாளொன்றுக்கு, 500 முதல் 600 வீட்டு காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றனர். குடோனிலும் போதிய அளவு காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது. ஒவ்வொரு விநியோகஸ்தரிடமும் நாள் ஒன்றுக்கு 500 முதல், 600 வாடிக்கையாளர்கள் சிலிண்டர் கேட்டு பதிவு செய்வது வழக்கம். தற்போது, நாள் ஒன்றுக்கு, 2,000 வாடிக்கையாளர் வரை சிலிண்டர் கேட்டு பதிவு செய்ய துவங்கியுள்ளனர். பதிவு செய்துள்ள அனைவருக்கும் வரிசைப்படி கண்டிப்பாக சிலிண்டர் கிடைக்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர். அன்னுார் பொதுத்துறை எண்ணெய் நிறுவன டீலர் ஒருவர் கூறியதாவது: கடந்த 7ம் தேதிக்கு பின், இதுவரை வணிக சிலிண்டர்கள் வரவில்லை. ஓட்டல்களில் தினம் ஒரு சிலிண்டரும், பேக்கரிகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு சிலிண்டரும் கொள்முதல் செய்து வந்தனர். கடந்த நான்கு நாட்களாக விநியோகம் இல்லாததால், ஓரிரு நாட்களில் ஓட்டல், பேக்கரிகள் மூடும் நிலை ஏற்படும். தற்போது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் காஸ் நிறுவனம் மட்டும், மத்திய அரசு நிர்ணயத்தை விட, 70 சதவீதம் கூடுதலாக விலை வைத்து, சிலிண்டர் 3,400 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இந்த சிலிண்டரும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது. மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவிட்டால், தொழில் நிறுவனங்கள், ஓட்டல், பேக்கரி உட்பட தொழில் நிறுவனங்கள் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். அன்னுாரில் அவிநாசி சாலையில் உள்ள சில பேக்கரிகள், '12ம் தேதி முதல் டீ, காபி மட்டும் மின் அடுப்பு (இன்டக்சன் ஸ்டவ்) வாயிலாக விற்பனை செய்யப்படும். தற்காலிகமாக, போண்டா, வடை, பஜ்ஜி உட்பட வகைகளின் விற்பனை நிறுத்தப்படுகிறது' என அறிவித்துள்ளனர். எனினும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் பற்றாக்குறை இல்லாமல் விநியோகிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கேஸ் விநியோகஸ்தர்கள் சிலர் கூறியதாவது: வழக்கமாக நாள் ஒன்றுக்கு 300ல் இருந்து 350 வரை, ஆன்லைன் சர்வர் வாயிலாக சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்படும். பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். தற்போது எரிபொருள் வரத்து குறைவு என்ற செய்தியால், பொதுமக்கள் வழக்கமாக முன்பதிவு செய்வதை விட, மூன்று, நான்கு மடங்கு, ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர். பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில், முன்பதிவு செய்ததால், ஆன்லைன் சர்வர் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சிலிண்டர் கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தினமும் தடையில்லாமல் ஒவ்வொரு ஏஜென்சிக்கும், 350க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வந்து கொண்டுள்ளன. அதனால், வீட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகித்து வருகிறோம். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.