மேலும் செய்திகள்
சாலையில் சாக்கடை கழிவுநீர் வாகன ஓட்டிகள் தவிப்பு
22-Jan-2026
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாட்டு சந்தை அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில், அவ்வப்போது கழிவுநீர் தேங்குவதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், மாட்டு சந்தை அருகே ரயில்வே வழித்தடம் குறுக்கிடுவதால் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் மற்றும் ஆனைமலை செல்லும் வாகனங்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலம், ரோட்டின் இரு பகுதியை விட தாழ்வாக உள்ளது. இதனால், கழிவுநீர் அவ்வப்போது தேங்குகிறது. மழை காலத்தில், கழிவுநீருடன் மழைநீரும் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர். தற்போது, மழையும் இல்லாத சூழலில் பாலத்தின் ஒரு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் திணறினர். பொதுமக்கள் கூறியதாவது: பாலத்தில் அவ்வப்போது கழிவுநீர் தேங்குவதால், காலை, மாலை நேரங்களில் குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். திடீரென கழிவுநீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அங்குள்ள ஓடை வழியாக சென்று தேங்குகிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில், பாலத்துக்கு வரும் கழிவுநீர், மழைநீர் அங்குள்ள கட்டமைப்பை அடையும். அதன்பின், அங்கிருந்து அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக ஓடையை அடையும். தற்போது, வடிகால் பராமரிப்பின்றி கழிவு நிரம்பியுள்ளது. கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே அதிகாரிகள் இணைந்து திட்டமிட்டு, இப்பகுதியில் நீண்ட காலமாக நிலவும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினர்.
22-Jan-2026