உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றிகள் தொல்லை தடாகம் விவசாயிகள் முறையீடு

காட்டுப்பன்றிகள் தொல்லை தடாகம் விவசாயிகள் முறையீடு

பெ.நா.பாளையம்: தடாகம் வட்டாரத்தில் காட்டு பன்றிகளை ஒழிக்க, நிரந்தர தீர்வு காண வேண்டுமென, தடாகம் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கோவையில் நடந்த மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் பிரபு பேசியதாவது: வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு, வழங்கப்பட்டு வரும் குறைந்த பட்ச இழப்பீட்டு தொகையினை அதிகரிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடாகம் வட்டாரத்தில் காட்டுப் பன்றிகளை பிடிக்க, வனத்துறையால் அமைக்கப்பட்ட கூண்டில் ஒரு பன்றி கூட பிடிபடவில்லை. எனவே அரசாணையை திருத்தம் செய்து, காப்பு காட்டிலிருந்து ஒரு கி.மீ.,க்கு வெளியே வரும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பிளாஸ்டிக் கழிவு, குப்பையை நீர் நிலைகள் மற்றும் புறம்போக்கு பள்ளவாரிகள் ஆகியவற்றில் கொட்டும் நிலை நீடிக்கிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பையை, துாய்மை பணியாளர்கள் தரம் பிரித்து, உரிய மறுசுழற்சி செய்ய ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறிப்பிட்ட இடத்தை, மாவட்ட நிர்வாகமே ஒதுக்க வேண்டும். மேற்கு புறவழிச்சாலையால் விளை நில பாதிப்பு உண்டான விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை கிடைக்கவும் நடவடிக்கை தேவை. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி