இலவச வேலை வாய்ப்பு பயிற்சி
அன்னூர்: அன்னூரில் தீனதயாள் உபாத்யாய திட்டத்தில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற மகளிர் திட்டம் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி அளிக்கப்பட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஜே.சி.பி., மற்றும் போர்க் லிப்ட் வாகன ஓட்டுநருக்கான பயிற்சி அளிக்க அன்னூர் பாரதமாதா கல்வி அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அன்னூர் ஐ.டி.ஐ., வளாகத்தில் பயிற்சி நடைபெறுகிறது. இதில் மகளிர் திட்டத்தின் மாவட்ட திட்ட இயக்குனர் மதுரா பேசுகையில், கோவை மாவட்டத்தில், அன்னூர், கோவை கிருஷ்ணா கல்லூரி மற்றும் பொள்ளாச்சி நாச்சிமுத்து கல்லூரி ஆகிய மூன்று மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 18 முதல் 35 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தங்குமிடம், உணவு இலவசம். பயிற்சிக்குப் பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தரப்படும், என்றார். மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் ரோஷிணி, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தங்கவேல், திட்ட தலைவர் சிவச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.