உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் நல சேவை மையம் அமைக்கலாம்! தோட்டக்கலைத்துறை அழைப்பு

உழவர் நல சேவை மையம் அமைக்கலாம்! தோட்டக்கலைத்துறை அழைப்பு

பொள்ளாச்சி;உழவர் நல சேவை மைய திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளோர் தோட்டக்கலைத்துறையை அணுகலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது: முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்த, 20 முதல், 45 வயதுக்கு உட்பட்ட நபர்கள், முதல்வரின் உழவர் நல சேவை மையம் துவங்கலாம். இந்த மையத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.வேளாண் இடுபொருட்கள் விற்பனை மற்றும் பண்ணை இயந்திர வாடகை மையம், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. உழவர் நல சேவை மையங்கள், 10 லட்சம் ரூபாய் முதல், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட வேண்டும். வங்கி கடன் உதவியுடன் தொடங்குபவர்களுக்கு திட்ட மதிப்பீட்டில், 30 சதவீதம் மானியமாக (3 லட்சம் ரூபாய் முதல், ஆறு லட்சம் ரூபாய் வரை) வங்கிகளுக்கு அனுப்பப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், விரிவான திட்ட அறிக்கையுடன் உரிய வங்கியில் கடன் பெற விண்ணபிக்க வேண்டும். வங்கி ஒப்புதல் கிடைத்த பின், மானியம் பெற, 'AGRISNET' இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இடுபொருட்கள் விற்பனை செய்ய தேவையான உரிமங்கள் இல்லாதவர்கள், விண்ணப்பிக்கும் போது, 'AGRISNET' இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி