உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிதி இல்லாமல் நீச்சல் குளம் பராமரிப்பு பணி தேங்கி கிடக்கிறது!பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு

நிதி இல்லாமல் நீச்சல் குளம் பராமரிப்பு பணி தேங்கி கிடக்கிறது!பயிற்சி பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு

கோவை:நிதி ஒதுக்கப்படாததால் பாரதியார் பல்கலை நீச்சல் குளம் பராமரிப்பின்றி உள்ளது. மாணவர்களுக்கு பயிற்சியும், போட்டிகளும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாரதியார் பல்கலையில் 2 ஏக்கர் நிலத்தில் இரு நீச்சல் குளங்கள் 2018ல் ரூ. 8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டன. இக்குளங்களில் மாணவர்கள், பொது மக்கள் கட்டணம் செலுத்தி நீச்சல் பயிற்சி பெற்று வந்தனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகளும் நடத்தப்பட்டன. 2,000க்கு அதிகமானோர் பயிற்சி பெற்றதால், பல்கலை உடற்கல்வியியல் துறைக்கு ஆண்டுக்கு தோராயமாக ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது. கடந்த ஏப்., மாதம் மாணவர் ஒருவர் பயிற்சியின் போது உயிரிழந்தார். அதன் பின் நீச்சல் குளங்கள் பூட்டப்பட்டன. தண்ணீரின் நிறம் பச்சையாக மாறி, துர்நாற்றம் வீசத்துவங்கியது. தண்ணீரை சுத்திகரிக்க பொருத்தப்பட்டுள்ள, ஐந்து மோட்டார்களும் ஆறு மாதங்களாக செயல்படாததால் பழுதானது. கடந்த ஜூலை மாதமே நீச்சல் குளங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர, நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தண்ணீரை வெளியேற்றி குளத்தை சுத்தப்படுத்தும் வேலைகள் மட்டும் நடக்கின்றன. தண்ணீரை சுத்திகரிக்கும் பில்ட்ரேஷன் பிளான்ட், மோட்டார்கள், குழாய்களில் தண்ணீர் கசிவு, 'பம்ப்' உள்ளிட்டவற்றை பராமரிக்க போதிய நிதி ஒதுக்கவில்லை. ஆறு மாதங்களாக பூட்டப்பட்ட நீச்சல் குளங்களால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர். தற்போது பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. கடந்தாண்டுகளில் நீச்சல் போட்டிகள் பாரதியார் பல்கலையில் நடத்தப்பட்டன. இம்முறை எட்டிமடை அமிர்தா பல்கலையில் நடக்க உள்ளன. இதனால் கோவை மாநகர பகுதிகளில் இருந்து செல்வோர் 25 கி.மீ.,க்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளதாக மாணவர்கள் புலம்புகின்றனர். விரைவில் குளங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென விரும்புகின்றனர். 'இன்னும் பத்தே நாள்' பல்கலை பதிவாளர் ராஜவேலிடம் கேட்டபோது, ''நீச்சல் குளங்களை சுத்தப்படுத்தும் வேலை நடக்கிறது. முழுமையாக பராமரிக்க ரூ.4.90 லட்சம் நிதி ஒதுக்கி கையொப்பம் இட்டுள்ளேன். துறை சார்ந்தவர்களிடம் இந்நிதியை ஒப்படைத்து இன்னும் 10 நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ