தானியங்கி கதவு திறக்க ஒரு நிமிடம் கடிந்து கொள்ளும் பயணியர்
பொள்ளாச்சி, ; அரசு டவுன் பஸ்களில், தானியங்கி கதவு அமைத்தும், திறப்பதற்கு ஒரு நிமிடமாவதால் பயணியர் கடிந்து கொள்கின்றனர்.அரசு போக்குவரத்துக்கழகம், பொள்ளாச்சி பணிமனைகளில் உள்ள அரசு பஸ்களின் வாயிலாக ஏற்படும் விபத்துகளை குறைக்க, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வகையில், ரோட்டில் நடந்து செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பஸ்களின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விடாமல் இருக்க, டவுன் பஸ்களின் இருபுறமும் படிக்கட்டுகளுக்கு இடையே 'அண்டர் ரன் புரொடெக்டர் ஷீட்' அமைக்கப்பட்டுள்ளது.மேலும், படிக்கட்டு பயணத்தை தடுக்க பஸ்களில், தானியங்கி கதவு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தானியங்கி கதவுகள், திறப்பதற்கு ஒரு நிமிடமாவதால், பயணியர் திணறி வருகின்றனர்.டிரைவர்கள் கூறியதாவது:பெரும்பாலான புது பஸ்களில் தானியங்கி கதவு உள்ளது. அதேநேரம், பழைய பஸ்கள் மற்றும் டவுன் பஸ்களில், தானியங்கி கதவு புதிதாக பொருத்தப்பட்டது. இதனால், ஆபத்தான முறையில் பயணியர் படியில் தொங்கி பயணிப்பது தவிர்க்கப்படுகிறது.இருப்பினும், இந்த தானியங்கி கதவு முறையாக இயங்குவதில்லை. கதவு திறக்கவே, ஒரு நிமிடம் வரை தேவைப்படுகிறது. இதனால், விரைந்து இறங்க முடியாமலும், பயண நேரம் அதிகரிப்பதால், பயணியர் அனைவரும் டிரைவர் மற்றும் கண்டக்டரை கடிந்து கொள்கின்றனர். தானியங்கி கதவு, சரிவர இயங்கும் வகையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.