உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனித - வனவிலங்கு மோதலை தடுக்கணும்!  கலந்தாய்வுக்கூட்டத்தில் அறிவுரை

மனித - வனவிலங்கு மோதலை தடுக்கணும்!  கலந்தாய்வுக்கூட்டத்தில் அறிவுரை

வால்பாறை; மனித -- வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொள்ளாச்சி எம்.பி., கூறினார். வால்பாறை நகராட்சி அலுவலகத்தில், அரசு துறை அதிகாரிகள் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி பேசியதாவது: வால்பாறை மக்களின் அடிப்படை தேவைகளை அதிகாரிகள் கண்டறிந்து உரிய தீர்வு காண வேண்டும். விதிமுறைகளை தளர்வு செய்து, ஏழை,எளிய மக்கள் நலன் கருதி அவர்களுக்கான மின்வசதி, பட்டா வழங்கிட அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். வால்பாறையில், மனித -- வனவிலங்கு மோதலை தவிர்க்க வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமித்து, மனித - வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக, மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி, தனியார் எஸ்டேட் அதிகாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நகராட்சியில் கிடப்பில் உள்ள வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக எஸ்டேட் பகுதியில் ரோடு, மின் வசதி உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு, பேசினார். கூட்டத்தில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் குமரன், தாசில்தார் அருள்முருகன், வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா, நகராட்சி பொறியாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பணிகள் துவக்கம் வால்பாறை அண்ணாதிடலில் சட்டபேரவையில் அறிவித்த பொதுநிதியின் கீழ், ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'கார் பார்க்கிங்' வசதியுடன் கூடிய ஸ்டேடியம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. இதே போல், பச்சமலை எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 9 லட்சம் ரூபாய் மதீப்பீட்டில் புதியதாக பள்ளி கட்டடம் மற்றும் சத்துணவுக்கூடம் கட்டுப்பணி துவங்கப்பட்டது. இந்த இரண்டு பணிகளையும் பொள்ளாச்சி எம்.பி., துவங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி