| ADDED : செப் 10, 2026 08:01 PM
வால்பாறை: வால்பாறை நகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் தற்செயல்விடுப்பு போராட்டம் நடந்தது. வால்பாறை நகராட்சியில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொத்தம் உள்ள, 36 ஊழியர்களில், 21 பேர் தற்செயல்விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நகராட்சி அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், மற்றும் வரி செலுத்த வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் வாயிலாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு வாயிலாக மேற்கொள்ள வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,’ என்றனர்.