பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாட குறிப்பேடுகள் பயணம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வினியோகிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளன. இதை தொடர்ந்து, மூன்றாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளி திறப்பு நாளில் மாணவர்களுக்கு வினியோகிக்கும் வகையில், நேற்று முதல் இருப்பு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு பாட குறிப்பேடுகள் வாகனங்களில் அனுப்பப்படுகின்றன. கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதில், 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், ஒன்பதாம் வகுப்பு வரை விலையில்லா பாட குறிப்பேடுகள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மொத்தம், 17,200 மாணவர்கள் பயன்பெறுவர். பள்ளிகள் திறந்ததும் இவை வழங்கப்படும். இவ்வாறு, கூறினர்.