உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய சிறை கட்டுமான பணிகளில் கால தாமதம்: வடமாநில தொழிலாளர் பற்றாக்குறை

புதிய சிறை கட்டுமான பணிகளில் கால தாமதம்: வடமாநில தொழிலாளர் பற்றாக்குறை

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையத்தில் புதிய மத்திய சிறைச்சாலை வளாகம் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கோவையில் தற்போது உள்ள மத்திய சிறைச்சாலை கடந்த, 1872ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு நிலவும் இட நெருக்கடி பிரச்சனைக்கு தீர்வு காணவும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உயர்ந்த பாதுகாப்புடன் கைதிகளை அடைத்து வைக்கவும், பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையம் ரோட்டில், 327.33 கோடி ரூபாய் செலவில், புதிய மத்திய சிறைச்சாலை வளாகம் கட்டப்பட்டு வருகிறது. புதிய சிறைச்சாலை வளாகத்துக்கான கட்டுமான பணியை, கடந்த ஆண்டு, மே 19ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் கட்டுமான பணியை மேற்கொள்கிறது. புதிய சிறைச்சாலை வளாகம், 95.72 ஏக்கரில் மூன்று கட்டங்களாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டத்தில், மத்திய சிறை காம்பவுண்ட் சுவர் மற்றும் ஆண்கள் சிறை கட்டப்படுகிறது. இதில், ஆண்கள் சிறை மட்டும், 17.02 ஏக்கரில் அமைகிறது. இரண்டாம் கட்டத்தில் பெண்கள் சிறை, 4.43 ஏக்கரில் அமைகிறது. மேலும், 111 சிறை துறை அலுவலர்களுக்கான குவாட்டர்ஸ், 5.95 ஏக்கரில் அமைகிறது. இது தவிர, முதல் பகுதி கட்டுமானத்தில் நிர்வாக அலுவலகம், ரிமாண்ட் கைதிகளை அடைத்தல், குற்றவாளிகளுக்கான ப்ளாக், கடுங்காவல் குற்றவாளிகளுக்கான அறை, சிறை மருத்துவமனை, சமையல் அறை, சமையல் கேஸ் மற்றும் பாயிலர் அறை, தின்பண்டங்கள் தயாரித்தல் அறை, நீதிமன்றம், தூக்கு மேடை, ஜெனரேட்டர் அறை, காவலர்கள் அறை, கைதிகளை அழைத்து வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. இது தவிர, சிறையில் ஒரு கண்காணிப்பாளர், இரண்டு கூடுதல் கண்காணிப்பாளர்கள், இரண்டு ஜெயிலர்கள், ஆறு உதவி செயலர்கள், 100 ஜெயில் வார்டர்கள் பணியாற்ற ஐந்து தளங்கள் கட்டப்படுகின்றன. ஒரே நேரத்தில், 3 ஆயிரம் கைதிகள் வரை அடைத்து வைக்கலாம். பணிகள் துவக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. சிறையின் காம்பவுண்ட் சுவர், அலுவலர்கள் தங்கும் அறை உள்ளிட்ட சில கட்டடங்களின் சில பகுதிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் கூறுகையில், 'கட்டுமான பணி நடந்துவரும் பகுதியில் பெரும் பாறைகள் இருப்பதால், அஸ்திவாரம் அமைக்கும் பணியில் சிரமம் உள்ளது. பாறைகளை உடைத்து எடுக்கவும், சிறு அளவிலான வெடிவைத்து தகர்க்கவும் ஒவ்வொரு முறையும் மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்று, பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது தவிர, சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்காளம், அசாம் சட்டசபை தேர்தலில் ஓட்டு அளிக்க சென்ற தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவில்லை. இதனால் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. சிறை வளாகம் முழுவதும் கட்டி முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை