விடுதி உணவில் புழு மாணவர்களுக்கு சிகிச்சை
போத்தனூர்: கோவை, மதுக்கரை அடுத்த திருமலையம்பாளையத்தில் தனியார் கலை, அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரி விடுதியில், 450 மாணவர்கள் தங்கியுள்ளனர். 'டிலைட் கேட்டர்ஸ்' எனும் நிறுவனம், மாணவர்களுக்கு உணவு வினியோகம் செய்கிறது. கடந்த ஒரு வாரமாக, உணவு சரியில்லை என முதலாம் ஆண்டு மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். உணவு வழங்கும் நிறுவனத்தை மாற்றுவதாக, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்ட கேசரியில், சிறு புழு இருந்துள்ளது. ஆவேசமடைந்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர். 12 மாணவர்கள் வயிற்று வலிப்பதாக கூறியதால், மதுக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்ற ஏழு பேர் விடுதிக்கு திரும்ப, ஐந்து பேருக்கு சிகிச்சை தொடர்ந்தது. தகவலறிந்த க.க. சாவடி போலீசார் விசாரணையில், மாணவர்கள் கல்லூரி முடிந்த பின் மாலை, விடுதியிலிருந்து வெளியே செல்ல அனுமதி கேட்டதும், கல்லூரி நிர்வாகம் மறுத்ததும் தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் சிகிச்சையிலிருந்த ஐந்து பேர், நேற்று விடுதிக்கு திரும்பினர்.