போகாத ஊருக்கு போனதாக சுங்கச்சாவடியில் பணம் வசூல்; பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை: வங்கி கணக்கில் இருந்து தவறுதலாக, சுங்க கட்டணம் வசூலித்ததால், பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை அருகே உள்ள இருகூர், ராவத்துாரை சேர்ந்தவர் ரூபிகா. இவருக்கு சொந்தமான காரில், 2024, செப். 6ல், விஜயமங்கலம், செங்கப்பள்ளி என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடி வழியாக பயணம் செய்தபோது, அவரது 'பாஸ்டாக்' கணக்கில் இருந்து, 250 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதைப்பார்த்து ரூபிகா அதிர்ச்சியடைந்தார்.அவர் கணக்கு வைத்துள்ள, ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கிக்கு புகார் அனுப்பினார். குறிப்பிட்ட அந்த நாளில், நகரத்துக்கு வெளியே எங்கும் பயணம் செய்யவில்லை என்றும், தனது 'பாஸ்டாக்' கணக்கில் இருந்து, தவறாக பணம் பிடித்தம் செய்துள்ளதாகவும், அத்தொகையை திருப்பி அனுப்பக் கோரியும் தெரிவித்திருந்தார். வங்கி நிர்வாகம், அவரிடம் தகவல் கேட்ட பிறகும் எந்த பதிலும் அளிக்கவில்லை. பிடித்தம் செய்த தொகையையும் திருப்பி தரவில்லை.இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த கூடுதல் ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'வங்கி நிர்வாகம் தவறுதலாக கட்டணத்தை பிடித்து, சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய், வழக்கு செலவு 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.