மாவட்டத்தில் 14ல் லோக் அதாலத் நீதிபதி ஜவஹர் தகவல்
கடலுார்:கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்கிறது..கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, வங்கி வழக்குகள் போன்றவை எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒரே நாளில் தீர்வு காணப்படுகிறது.பொதுமக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவர்களுடைய வழக்கறிஞர்கள் மூலம் மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் பேசி தீர்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் அல்லாத வங்கிக்கடன் வழக்குகளும், மக்கள் நீதிமன்றம் நடக்கும் நாளன்று சமரசம் பேசி வழக்குகளை முடித்துக் கொள்ளலாம்.மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய நீதிமன்றங்களில் வரும் 14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்கிறது. வழக்குகளால் காலவிரயம், பணவிரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.