காலை உணவு திட்டம் அதிகாரி ஆய்வு
நெல்லிக்குப்பம்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவு வழங்க தமிழக அரசு உத்தர விட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், சுகாதார வளாக பராமரிப்பாளர்கள் என 165 பேருக்கு தினமும் காலை உணவு வழங்க டெண்டர் விடப்பட்டது . கடந்த 15 நாட்களுக்கு முன் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கியது. ஒரு சில நாட்கள் மட்டும் சுவையான உணவு வழங்கியதாகவும், அதன் பிறகு உணவு தரமில்லாமல் வழங்குவதாகவும் துாய்மை பணியாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்ததாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்து உணவை சாப்பிட்டு சோதனை செய்தார். தரமான உணவு வழங்க வேண்டுமென, சமையலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.