வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
கடலுார்: வடலுாரில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, ஐந்தரை சவரன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வடலுார் காமராஜர் நகரைச்சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி தவமணி,70. இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். அவர்கள் பணிநிமித்தமாக வெளியூரில் உள்ள நிலையில் தவமணி மட்டும் தனியாக வசித்துவந்தார். உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் உள்ள மகன் வீட்டில் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜெகநாதனின் நினைவு தினத்திற்காக மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தனர். வீட்டை சுத்தம் செய்து பூட்டிவிட்டு, நெய்வேலியில் உள்ள மூத்த மகன் வீட்டிற்கு அனைவரும் சென்றனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவிலிருந்த செயின், மோதிரம், தோடு உள்ளிட்ட ஐந்தரை சவரன் நகை மற்றும் 50ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றனர். நேற்றுமுன்தினம் காலை தவமணி வீட்டிற்கு வந்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த நகை, பணம் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர்.