நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
குறிஞ்சிப்பாடி: அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குறிஞ்சிப்பாடி வட்டம், ஆடுர் அகரம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் பழனிசாமி, நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் ஆய்வு செய்து கூறியதாவது; அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மட்டுமே பெறப்படும். போலியான ஆவணங்கள் மூலம் நெல் விற்பனை செய்வோர் தடை செய்ய மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி சராசரியாக 6 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படு கிறது. அதில் 4 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் அரவை மில், சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் இதுவரை 1.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 26, 649 விவசாயிகளுக்கு ரூ.342.07 கோடி வழங்கப்பட்டுள்ளது. 277 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் கூடுதல் நெல் கொள்முதல் செய்யப்படும். மாவட்டத்தில் அதற்காக 13 சேமிப்புக் கிடங்குகள், தேவையான சவுக்கு கட்டைகள் இருப்பில் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல புவனகிரி அடுத்த கீரப்பாளையம் திறந்தவெளி சேமிப்பு மையத்திலும் ஆய்வு நடந்தது.