உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புறக்காவல் நிலையம் அமைக்க திட்டக்குடியில் பயணிகள் எதிர்பார்ப்பு

புறக்காவல் நிலையம் அமைக்க திட்டக்குடியில் பயணிகள் எதிர்பார்ப்பு

திட்டக்குடி: திட்டக்குடி பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி நகராட்சி முக்கிய பகுதியாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தை பயன்படுத்தி சிறுமுளை, பெருமுளை, கீழ்ச்செருவாய், இடைச்செருவாய், வதிஷ்டபுரம், தர்மகுடிக்காடு, கோழியூர், கோடங்குடி மற்றும் பெரம்பலுார் மாவட்ட கிராமங்கள் என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு திட்டக்குடி வந்து, இங்கிருந்து விருத்தாசலம், கடலூர், திருச்சி, சென்னை, சேலம் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அச்சமடைந்தனர். இதற்காக, கடந்த 2008ல் அப்போதைய பேரூராட்சி நிர்வாகமும், வணிகர் நல சங்கமும் இணைந்து பஸ் ஸ்டாண்ட் முன்பு புறக்காவல் நிலையம் அமைத்து கொடுத்தது. இதனால் பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர். கடந்தாண்டு பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் பணி துவங்கியபோது புறக்காவல் நிலையம் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டப்படாததால் இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, திட்டக்குடி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ