உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கவுரவ நிதியுதவி திட்ட உதவித்தொகை: பதிவு செய்வது கட்டாயம்

கவுரவ நிதியுதவி திட்ட உதவித்தொகை: பதிவு செய்வது கட்டாயம்

கடலுார்: பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள அட்டையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 79,469 விவசாயிகளுக்கு, 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 20 தவணைகளில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 21வது தவணை உதவித்தொகை பெற, தனித்துவ விவசாய அடையாள அட்டையில் பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கவுரவ நிதிஉதவி பெறும் விவசாயிகளில், இதுவரை 62,095 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 17,374 பேர் தனித்துவ அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். இம்மாத தொடக்கத்தில், 21 வது தவணைபெறுவதற்கு, விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டியது கட்டாயம். அதனால் விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமோ, தங்களது சிட்டா, ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் உடன் சென்று உடனடியாக பதிவு செய்து, தனித்துவ அடையாள அட்டை பெற்று, உதவித்தொகை பெறவதை உறுதிப்படுத்தி கொள்ளலாம். மேலும், முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள், தங்களது பெயரில் சிட்டா பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து, தனித்துவ விவசாய அடையாள அட்டை பெற்றால் மட்டுமே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !